எனக்கு பிடிக்குமென்று இந்த ஞாயிற்று கிழமையிலும்

ஞாயிற்று கிழமைகளில் 





வயது ஐந்து 


அதிகாலை நேரம், 
அப்பாவின் குரல்,
சில்லென குளியல், 
விபூதி வாசம், 
திருவப்பூர் கோவில், 
சைக்கிள் பயணம்,
கம்பன் முதல், 
வள்ளுவன் தொட்டு 
கண்ணதாசன் வரை 
இலக்கியம் பேசிவிட்டு  
கடன் கணக்கில்
மனம் பரிமாறும் - அப்பா - பெரியப்பா 
தோழிகளுடன் விளையாட்டும் 
வேடிக்கையுமாய் அக்கா 
அன்பாக அம்மா உணவளித்தால் 

"எனக்கு பிடிக்குமென்று
 இந்த ஞாயிற்று கிழமையிலும்
 சுடச்சுட சாதம்
 வெண்டக்காய் பொறியல்
 முருங்கக்காய் சாம்பார்
  தக்காளி ரசம்"

வயது பத்து 


சூரியன் உதிக்கையில் 
சூழ்நிலை எழுப்பிட 
கைகளில் மட்டை
கண்களில் கனவு
வெற்றியின் நினைவு  
ஊர் ஒர மைதானம் 
வெய்யில் தலை இரங்க 
வேர்வை உடல் பூக்க 
வீதியில் விளையாடும்
விதியின் விளையாட்டு 
இந்த முறையும் 
விரக்தியாய் வீடு திரும்ப 
அப்பா கடு கடுக்க 
அம்மா சிடு சிடுக்க 
இலையில் பரிமாற 


"எனக்கு பிடிக்குமென்று
 இந்த ஞாயிற்று கிழமையிலும்
 சுடச்சுட சாதம்
 வெண்டக்காய் பொறியல்
 முருங்கக்காய் சாம்பார்
  தக்காளி ரசம்"

வயது பதினைந்து 


அரும்பு மீசை வர, 
ஆசை மீறி வர, 
தெருவெல்லாம் திரிந்துவிட்டு, 
கனவுகளை துரத்திக்கொண்டு,
காலத்தின் பின் செல்ல 
சித்தாந்த வேதாந்தங்கள் 
எனை குழப்ப,   
பல்லவன் குளக்கரையில் 
டீக்கடை உட்புறத்தில் 
பார்த்ததை பக்கத்து 
வீட்டில்லுள்ளோர் பக்குவமாய் 
பரிந்துரைக்க
கொஞ்சம் கோவமாய்
என் இலையை நிரப்பியது 

"எனக்கு பிடிக்குமென்று
 இந்த ஞாயிற்று கிழமையிலும்
 சுடச்சுட சாதம்
 வெண்டக்காய் பொறியல்
 முருங்கக்காய் சாம்பார்
  தக்காளி ரசம்"

வயது இருபது 


சென்னை எனை இழுக்க, 
மெரினா அலை தழுவ, 
கண்களில் கவி சேர்க்க, 
உலக அறிவு  வேண்டும் என்றே, 
மனதில் கனவுகள் சிறகடிக்க, 
பைந்தமிழ் கவிதைகள் வசமிருக்க,
நாட்கள் இனித்திருக்க 
நட்பின் பிடியில் நானிருக்க, 
அலைபேசியில் அம்மா சொன்னது 

"உனக்கு பிடிக்குமென்று
 இந்த ஞாயிற்று கிழமையிலும்
 சுடச்சுட சாதம்
 வெண்டக்காய் பொறியல்
 முருங்கக்காய் சாம்பார்
  தக்காளி ரசம்"

வயது இருபத்தைந்து 


புதியதாய் உலகம் என்னை 
புதியதோர் செயல்கள் செய்ய 
அரியதாய் கற்பாய்  என்றே 
ஆழ்மனம் எடுத்துரைக்க
காதல் என்னை பின் தள்ள 
காலம் தூண்டியது முன் செல்ல  
எண்ணம் போல் பறந்திருக்க 
எதிர்கால வேர்கள் எல்லாம் 
நீர் வேண்டி தவித்திருக்க 
அப்பா சொன்னார் 


"எனக்கு பிடிக்குமென்று
 இந்த ஞாயிற்று கிழமையிலும்
 சுடச்சுட சாதம்
 வெண்டக்காய் பொறியல்
 முருங்கக்காய் சாம்பார்
  தக்காளி ரசம்"

வயது இருபத்தி ஒன்பது 


வாலிபம் கனிந்திருக்க 
வாழ்க்கையின் ஒளி தேடி 
நான் எந்தன் சிறகடிக்க 
கவிதையில் நான் கலக்க 
கலங்கிய முகத்தோடு 
அக்கா எதிர்முனையில் 
அம்மா இங்கிருந்து 
"வரன் ஒன்னு வந்திருக்கு 
 பொருத்தம் பாக்கணும்" 
என்று முனு முணுக்க 
எனக்குள் சொல்லிக்கொண்டேன் 

"எனக்கு பிடிக்குமென்று
 இந்த ஞாயிற்று கிழமையிலும்
 சுடச்சுட சாதம்
 வெண்டக்காய் பொறியல்
 முருங்கக்காய் சாம்பார்
  தக்காளி ரசம்"

ஏதேதோ மாறுகையில் 
என் வாழ்க்கை
எந்நாளும் 
நம்பிக்கையில்
தன்னம்பிக்கையில் !!!

"எனக்கு பிடிக்குமென்று
 அடுத்த ஞாயிற்று கிழமையிலும்
 சுடச்சுட சாதம்
 வெண்டக்காய் பொறியல்
 முருங்கக்காய் சாம்பார்
 தக்காளி ரசம்"

எண்ணமும் எழுத்தும்
குருஸ்ரீ 

Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

மயில் !!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!