பெண்ணுக்கும் காதல் வரும்....!!!


அன்னை பெற்றால் என்னை அறிவுசார்  வல்லினமாய் !!!
இளமை வெகுஇயல்பாய் மாற்றியது இடையினமாய் - உன்
ஆண்மை தீண்ட தீண்ட நான் இன்று மெல்லினமாய் !!!



மெல்ல சிரித்து, கொஞ்சம் குழைந்து
நீ பேசும் மொழிகளில்...வார்த்தைகள்
சிதறின மௌனங்களாய் ...
உன் ஒற்றை வார்த்தை உயிரின் ஆழம் சென்றது என் வாய்மொழிக்கு வார்த்தைகள் தடை சொன்னது 


உன் சின்ன சிரிப்பில் சிநேகிக்கும் முறையில்
உள்ளம் உருகியது, உயிரை பருகியது
காதல் தழுவியது !!! 
உனதிருவிழி தீண்டிய தேவனொடியில்
மலரானேன் - உன் கைகள் எல்லை தாண்டிய
மோக பொழுதில் சிலையானேன் 
பதின்பருவம் எய்திய உணர்வுகளை தந்து  - உன் விழி
பார்வைகளாலேயே என் இளமையை ஈர்த்தது  - தன் வழி 
என் எழில் கூட்ட ஒப்பனைகள் தேவைப்படவில்லை
என் நிழல் பட்டு கண்ணாடிகள் காயப்படவில்லை 
ஆகாயம் பார்க்கவே தயங்கியவள்,
உன்னால் வெட்கம் தின்ன பழகிக்கொண்டேன்,

என் அழகை ரசிக்கும் ஆட்களுக்கு பஞ்சமில்லை - ஆனாலும்
உன் போல அழகாய் ரசிக்க உலகினில் எவருமில்லை 
உயிர் தந்த உறவையெல்லாம் தவிக்கவிட்டு
உன் உயிரோடு உறவாட உண்மை மட்டும் சீதனமாய்
எடுத்து வந்தேன் 
பழகி களித்த அன்பையெல்லாம் பாதியில் உதறிவிட்டு
உன் பத்தினியாய் வாழ்வதற்கு ஆதரவாய் பெண்மை மட்டும்
மலர்ந்து வந்தேன் 

நீ சொல்லும் பொய்யெல்லாம் ஓர் நாளில் நிஜமாக மாறிடவே
தேடாத கடவுளெல்லாம் தேடி தேடி வேண்டி வந்தேன்
தனிமைகள் எனக்கு பழக்கமாகின
துணைக்கு உன் நினைவுகள் இருப்பதால் 

உன் கண்ணில் பட்டது என் விதி செய்த பாவம்,
நீ காதல் தந்தது நம் இளமை தந்த சாபம்,
இன்று என்னை வதைப்பது நீ செய்யும் துரோகம் உன்னால் மட்டும்தான் இமைகளை அசைக்காமல் என் விழிகள் இயங்கியது 
உன்னிடம் மட்டும்தான் என்னால் பிரிவுகளையும் விரும்ப முடிகிறது

என் காதல் பூவில் விழும் பனித்துளியாய் பகலில் மறைவதில்லை வேரில் ஊரிவிட்ட மழைத்துளிபோல் விருக்ஷமாய் - அழிவதில்லை

இன்னும் வாடாமல் என்னுள் நம் ஏகாந்த நினைவுகள் - காதலை மட்டும் சுமந்துகொண்டு என் வண்ண கனவுகள் !!!
இன்னுமொரு பிறவி வேண்டும் அதிலே
நம் காதல் காவியமாய் வாழும் ....வரம் வேண்டும் ...

கற்பனையும்  எழுத்தும் 
- கு. ஸ்ரீமணிகண்டன் 

Comments

Popular posts from this blog

வாலி - தனி கவிதைகள்!!! - சில நீங்கள் வாசிக்க!!!

புதுக்கவிதைக்கு மணிவிழா!!!

மயில் !!!